Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Saturday 24 June 2017

ஸ்கிப்பிங் டான்ஸ் தெரியுமா?

சிறு வயதில் நீங்கள் ஸ்கிப்பிங் விளையாடி இருப்பீர்கள், கொஞ்சம் வேகமாக ஆட பழக்கப்பட்டவர்கள் எதிரே இன்னொருவரை நிறுத்தி அவரையும் ஆட்டத்தில் சேர்த்து ஸ்கிப்பிங் விளையாடி இருப்பீர்கள், ஆனால் நீங்கள் நடனம் ஆடி கொண்டே ஸ்கிப்பிங் விளையாடி இருக்கிறீர்களா?


 கீழே இருக்கும் காணொளி காட்சியை பாருங்கள், அதே போல நீங்களும் ஆட முயற்சி செய்து உடலில் சுளுக்கு விழுந்து விட்டால் நாங்கள் பொறுப்பல்ல.

Thursday 22 June 2017

தனித்து இருந்த பயணிகளை இணைத்த விமான நிறுவனம்

இன்றைய ஸ்மார்ட்போன் யுகத்தில் வீட்டிலும் வெளியிலும் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் முகம் கொடுத்து பேசி கொள்வது என்பதே அரிதாகி விட்டது. சிறியவர் பெரியவர் என்ற பேதமில்லாமல் எல்லா வயதினரையும் இந்த ஸ்மார்ட்போன் வியாதி பிடித்திருக்கிறது. விஞ்ஞானம் உலகத்தை நம் உள்ளங்கையில் கொண்டு வந்து விட்டது என்று பெருமைப்படுவதா? இல்லை வெளி உலகத்தையும் சொந்தங்களையும் முற்றிலுமாக மறக்க செய்து நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அடிமைபடுத்தி வருகிறதே என்று வேதனைபடுவதா? என்று புரியவில்லை.



 இந்த நிலையில் தனித்து இருக்கும் மனிதர்களை ஒருவருடன் ஒருவர் இயல்பாக பேச வைக்க ஒரு விமான நிறுவனம் வித்தியாசமான யுக்தியை கையாண்டுள்ளது. டச்சு நாட்டை சேர்ந்த KLM விமான நிறுவனம் பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தில் அவர்களை ஒருவருடன் ஒருவர் பேச வைப்பதற்கு ஒரு வட்ட வடிவ பஃபெட் விருந்து மேஜையை தயாரித்து அதனை உயரத்தில் வைத்து விட்டு, மேஜையை சுற்றியுள்ள எல்லா நாற்காலிகளிலும் பயணிகள் அமர்ந்தால் அந்த மேஜை மெல்ல மெல்ல கீழே இறங்குவது போல் ஏற்பாடு செய்தனர், பின்னர் என்ன நடந்தது என்பதை கீழே இருக்கும் காணொளி காட்சியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


இனியாவது ஸ்மார்ட்போனை கீழே வைத்து விட்டு நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் கவனிக்கலாமே.

Wednesday 21 June 2017

பிறந்த போது பிரிந்த இரட்டையரை இணைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சி

சீனாவில் ஒரு தாய்க்கு பிறந்த ரெட்டை சகோதரிகள் பிறந்த உடன் இருவரும் இரு வேறு குடும்பத்தில் தத்து கொடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும்  ஒன்று சேர்ந்த அதிசயம் சமீபத்தில் நடந்திருக்கிறது.



 அமெரிக்காவிலுள்ள வின்கன்சின் மாகாணத்தை சேர்ந்த ஆட்ரே டோரிங், வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்த கிரேசி ரெயின்ஸ்பெரி இருவருக்கும் இப்போது பத்து வயதாகிறது, இருவரும் நேருக்கு நேர் சந்தித்த போது ஆனந்த கண்ணீரை அடக்க முடியாமல் தவித்தனர்.


ஆட்ரே டோரிங்கின் தத்து தாயான ஜென்னிபர் டோரிங் தான் முதலில் தான் தத்தெடுத்த மகளை போலவே இன்னொரு குழந்தையும் உள்ளது என்ற உண்மையை தெரிந்து கொண்டார், அவர் இந்த இரட்டை சகோதரிகளை பெற்றெடுத்த தாய் தன் மடியின் இரு பக்கமும்  இரண்டு சகோதரிகளையும் அமர வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை காண நேர்ந்தது, இரண்டு குழந்தைகளும் ஒன்று போலவே இருந்தன, ஒரு குழந்தை தான் தத்தெடுத்த ஆட்ரே என்று புரிந்து கொண்டார், இன்னொரு குழந்தையை தேடும் முயற்சியை தொடங்கினார். இன்னொரு குழந்தையை தத்தெடுத்த தாயான நிகோல் ரெயின்ஸ்பெரியை சமூக வலைதளம் மூலம் கண்டுபிடித்தார்.



டாக்டர் நான்சி சேகல் என்ற மருத்துவர் இரண்டு சிறுமிகளுக்கும் டி என் ஏ பரிசோதனை மேற்கொண்டு இருவரும் ரெட்டையர் தான் என்று உறுதிபடுத்தி உள்ளார்.

இரட்டை சகோதரிகள் இருவரும் பேரில் சந்திப்பதற்கு முன்பு வீடியோ மெசேஜிங் மூலம் தொடர்பு கொண்டு பேசினர், அப்போது இருவரும் தங்கள் வெளிதோற்றம் முதல் குணாதிசயங்களில் உள்ள ஒற்றுமைகளை பகிர்ந்து கொண்டனர்.

இரட்டையர்கள் இருவருக்கும் சில இதய கோளாறுகள் இருந்துள்ளன, அதற்காக இருவருக்கும் சில அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது. இரண்டு சிறுமிகளும் சிக்கன் அல்பிரெடோ மற்றும் மாக் அண்ட் சீஸ் உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர்.

குட் மார்னிங் அமெரிக்கா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்த போது அனந்த கண்ணீர் விட்டது இணைந்த இரு ரெட்டை சிறுமிகள் மட்டுமல்ல, அவர்களை கண்ட ஸ்டுடியோவில் இருந்த அத்தனை பார்வையாளர்களும் தான் என்கிறார் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ஜின்ஜர் சீ .



Tuesday 20 June 2017

மீண்டும் சந்தைக்கு வரும் நோக்கியா

ஹ்ச் எம் டி குளோபல் என்ற நிறுவனம் மூலம் தற்போது மூன்று வகை  நோக்கியா ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் (நோக்கியா மூன்று, நோக்கியா ஐந்து மற்றும் நோக்கியா ஆறு) இந்தியாவில் வெளியிடப்பட்டு விற்பனை துவங்கி உள்ளது. இதில் நோக்கியா மூன்று மற்றும் நோக்கியா ஐந்து ஸ்மார்ட் போன்கள் ரீடைல் கடைகள் மூலம் கிடைக்கும், நோக்கியா ஆறு ஸ்மார்ட் போன்கள் அமேசான் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து வாங்கலாம்.

விலையை பொறுத்தவரை  நோக்கியா ஆறு ஸ்மார்ட் போன் விலை தான் மிக அதிகமாக ரூபாய்  14999க்கும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா ஐந்து ரூபாய் 12899க்கும்,  நோக்கியா மூன்று ரூபாய் 9499க்கும் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு காணொளி காட்சியை பார்க்கவும்.

Monday 19 June 2017

புலி வளர்ப்பு

"நான் அவைகளை என் பிள்ளைகள் போல பார்த்து கொள்கிறேன், அவைகளை பொறுத்த வரை என்னை தங்கள் தாயாகவே நினைக்கின்றன, என் முகத்தோடு முகம் வைத்து உரசி விளையாடி, மூக்கில் முத்தம் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றன" என்கிறார் ஜேனிஸ் ஹேலி. இவர் தன் வீட்டில் வளர்க்கும் நாய் குட்டிகளை பற்றி சொல்கிறார் என்று தானே நினைத்திருப்பிர்கள் ஆனால் நீங்களும் நானும் நினைத்தது போல் அவர் நாய் குட்டி பற்றி பேசவில்லை, அவர் தன் வீட்டு கொல்லைப்புற தோட்டத்தில் வளர்க்கும் இரண்டு புலிகளை பற்றி தான் பேசுகிறார். சேபர் என்ற அறுநூறு எல் பி எடையுள்ள பெங்கால் வெள்ளை ஆண் புலியையும், ஜன்டா என்ற நானூறு எல் பி எடையுள்ள பெங்கால் பெண் புலி ஒன்றையும் அவைகள் குட்டியாக இருந்த காலத்திலிருந்து வளர்த்து பராமரித்து வருகிறார்.


புலிகளோடு பழகுவது என்றால் எல்லோருக்கும் மனதில் ஒரு நடுக்கம் இருக்கத்தான் செய்யும் ஆனால் இவரிடம் புலி வளர்க்க தன்னார்வலராக சேர்ந்திருக்கும் கேரி என்ற பெண்ணுக்கும் ஜேனிஸ் ஹேலி போல் புலிகளிடத்தில் பழகுவதில் எந்த அச்சமும் இல்லை. சில சமயம் சேபர் என் கையை வாயால் கவ்வி கொண்டு கூண்டு முழுவதும் பிடித்து இழுத்து செல்லும் ஆனால் எனக்கு தெரியும் அவைகளுக்கு இது ஒரு விளையாட்டு, அதிலும் சேபர் இரண்டு வார கால குட்டியாக இருக்கும் போதிலிருந்து என்னிடம் நன்றாக பழகி விட்டான்.

 இப்போது ஐம்பத்தி ஏழு வயதாகும் ஜேனிஸ்க்கும் அவர் கணவர் டேவிட்டிற்க்கும் ஆறு வயதாகும் சேபரையும், பனிரெண்டு வயதாகும் ஜன்டாவையும் பார்த்து கொள்வதே முழு நேர வேலையாய் இருக்கிறது. புலிகளை வீட்டின் கொல்லைப்புற தோட்டத்தில் வளர்ப்பது என்றால் பக்கத்து வீட்டில். தெருவில் இருப்பவர்கள் எதிர்க்காமல் இருப்பார்களா? ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தது, ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்.

கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேரம் புலிகளுடன் செலவிடும் ஜேனிஸ் இரவில் அவைகளை உறங்க வைத்த பிறகு தானும் சில மணி நேரம் ஓய்வு எடுக்கிறார். ஆளை கொல்லும் புலிகளை கூட அன்பினால் கட்டி போட்டு விட முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜேனிஸ்.

Sunday 18 June 2017

பெற்றோரும் - பிள்ளைகளும்

"தாயை போல் பிள்ளை நூலை போல் சேலை" என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு, பிள்ளைகள் பெரும்பாலும் தங்கள் பெற்றோரிடமிருந்து தான் நல்லதும் கெட்டதும் கற்று கொள்கின்றனர், சிறு வயதில் அவர்கள் பெற்றோரிடம் மட்டுமே அதிக நேரத்தை செலவிடுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எவ்வளவு நல்ல விஷயங்களை போதித்தாலும், பிள்ளைகள் அவர்கள் பெற்றோர்கள் எப்படி வீட்டிலும் வெளியிலும் நடந்து கொள்கிறார்களோ, பிறரிடம் எப்படி பழகுகிறார்களோ, அதையே தங்கள் செயல்களின் மூலமாக பிள்ளைகள் கண்ணாடி போல் பிரதிபலிக்கின்றனர். நல்ல காரியங்களை அவர்கள் கண்களுக்கு முன்பாக செய்தால் நல்ல பழக்கங்களையும், தீய காரியங்களை அவர்கள் கண்களுக்கு முன்பாக செய்தால் தீய பழக்கங்களையும் எளிதில் கற்று கொண்டு விடுவார்கள். உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் நல்ல மனிதனாக இருக்க வேண்டுமா? அல்லது .... தீர்மானிக்க போவது உங்கள் செயல்கள் தான், இனியாவது பிள்ளைகளுக்கு முன்பாக பெற்றோர்கள் நல்லது மட்டுமே செய்யலாமே.

Thursday 15 June 2017

எனக்கு பிடித்த (இந்த வார ) குறும்படம்

எனக்கு மிகவும் பிடித்த குறும்படம் என்று சொல்வதை விட என் மனதை மிகவும் பாதித்த குறும்படம் இது, இன்றைக்கு கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகள், உயர்தட்டு மக்கள் வசிக்கும் வீடுகளில் வீட்டுவேலைக்கு செல்லும் சிறுமிகளின் பரிதாப நிலையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் குறும்படம். வயிற்றில் பசியோடு வீட்டு வேலையும் பார்த்து விட்டு நல்ல உணவுக்காக இந்த சிறுமி ஏங்கும் பரிதாபம், வீட்டில் வளர்க்கும் நாய்க்கு கொடுக்கும் அன்பையும் உணவையும் கூட வீட்டில் வேலைக்கு வரும் சிறுமிக்கு தராத கொடூர மேல்தட்டு சுபாவம் என்று இந்த குறும்படத்தில் வரும் காட்சிகள் கல் மனதையும் கரைய வைத்து விடும்.
குறும்படத்தை பார்த்து வேதனைபடுவதோடு நின்று விடாமல், இவர்களை போன்ற சிறுமிகள் உங்கள் தெருவில் உங்களுக்கு அருகாமையில் வறுமையின் பிடியில் வேதனைப்பட்டு கொண்டிருந்தால் அவர்களது உணவு மற்றும் கல்வி தேவைகளுக்காக உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை ஆசிர்வதிக்கப்படும்.

Wednesday 14 June 2017

ஆட்டோ ராஜா - அதரவற்ற மக்களை அரவணைத்த மனிதர்

ஆட்டோ ராஜா - ஒரு டெலிபோன் லைன்மேனின் மகன், சிறு வயதிலேயே குடி, திருட்டு, சூதாட்டம் என்று எல்லா தீய பழக்கங்களையும் கற்று ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர், அவர் சிறு வயதில் ஆடிய ஆட்டத்தை ஒரு கட்டத்துக்கு மேல் (தாயின் தாலியை கூட விட்டு வைக்காமல் வீட்டிலேயே நகையை திருடி அடகு கடையில் அடகு வைத்திருக்கிறார்) பொறுக்க முடியாத அவர் பெற்றோர் அவரை வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கின்றனர். பெங்களுரு நகர வீதிகளில் யாருமற்ற அனாதையாக சுற்றி திரிந்திருக்கிறார். வயிற்று பிழைப்புக்காக ஹோட்டல்களில் தட்டுகளை கழுவும் வேலையும் பார்த்திருக்கிறார், ஆனால் அங்கேயும் கை வைத்ததின் காரணமாக வேலையிலிருந்து விரட்டப்பட்டார். ஒரு திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு பத்து நாள் வேதனை அனுபவித்திருக்கிறார், வேதனை தாங்க முடியாத போது தன்னை இந்த சிறையிலிருந்து வெளியில் கொண்டு வந்தால் திருந்தி ஒரு நல்ல மனிதனாக வாழ்வதாக கடவுளிடம் ஒரு வேண்டுதல் செய்திருக்கிறார். அவர் பெற்றோர் அவரை சிறையில் இருந்து மீட்டனர். அவர்களிடமிருந்து ஆயிரம் ருபாய் மட்டும் பெற்று ஆட்டோ ஓட்டுவதற்கு டிரைவிங் லைசென்ஸ் எடுத்து வாடகை ஆட்டோ ஓட்ட துவங்கினார். அவர் வாழ்க்கை மாற துவங்கியது.
ஆட்டோ ஒட்டி செல்லும்போது தெரு ஓரங்களில், பிளாட்பாரத்தில் ஆதரவற்ற வயதான மக்கள் உணவின்றி உடையின்றி தவிப்பதை காண நேர்ந்திருக்கிறது, இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். ஒரு பனிமழை பொழிந்த பீ என் டி காலனி, டாநெரி சாலையில், இரவில் ஒரு முதியவர் சாலையோரத்தில் குளிரில் நடுங்கியபடி தவிப்பதை கண்டிருக்கிறார், ஆனால் அந்த நேரத்தில் கையில் ஏதுமில்லாததால் உதவி செய்ய முடியாமல் கடந்து சென்றிருக்கிறார். அடுத்த நாள் அந்த பகுதியில் சென்று விசாரித்த போது குளிர் தாங்க முடியாமல் அந்த முதியவர் இறந்து போன அவலம் தெரிய வந்திருக்கிறது. அது முதல் தெருவில் ஆதரவற்ற மக்களை எங்கு கண்டாலும் அவர்களை காப்பாற்றி தன வீட்டிற்க்கு அழைத்து வந்து அவர்களை உணவும், உடையும் கொடுத்து பராமரிக்க தொடங்கி இருக்கிறார்.
முதன் முதலாக இவர் காப்பற்றியது பின்னிபேட் பகுதியில் குப்பை கொட்டும் கிடங்கில் எலும்பும் தோலுமாக கிடந்த ஒரு முதியவரை தான், அப்போது இவரிடத்தில் அவரை பராமரிக்க தேவையான பணம் கையில் இல்லை ஆனால் கடவுள் எப்படியும் தனக்கு உதவுவார் என்ற நம்பிக்கை மட்டும் உள்ளத்தில் இருந்திருக்கிறது. இவர் நம்பிக்கை பொய்க்கவில்லை, அந்த நேரத்தில் அறிமுகமில்லாத ஒரு மனிதர் இவரை சந்தித்து பண உதவி செய்துள்ளார்.
          
 பின்பு, ஒரு கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் ஒன்றும், கர்னாடக மாநில முன்னாள் முதல்வர் H D குமாரசுவாமி அவர்களும் இவரை ஆதரித்து கட்டிடம் கட்ட நிலமும், நிதி உதவியும் செய்தனர். இன்று, கிட்டத்தட்ட நான்காயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள், ஆதரவற்றோருக்கு அடைக்கலம் கொடுக்கும் இல்லமாக ' நியூ ஆர்க் மிசன்' என்ற பெயரில் இவரது தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஐம்பது வயது கடந்த நிலையில் இன்றும் அதரவற்ற மக்களை ஆதரிக்கும் புனிதராக ஆட்டோ ராஜா உயர்ந்து நிற்கிறார்.
         

Monday 12 June 2017

உண்மை காதல் அழிவதில்லை - வாதத்தால் படுக்கையில் முடங்கிய காதலனை கரம் பிடித்த பெண்

உண்மையான காதல் எத்தனை சோதனை வந்தாலும், சோதனைகளை தாண்டி நிலைத்து நிற்கும், ஒரு குறிப்பிட்ட மதத்தில்  திருமணம் நடக்கும் போது மணமகளும், மணமகனும் (வாழ்விலும் தாழ்விலும் எந்த சூழ்நிலையிலும் எப்போதும் உன்னோடு இருப்பேன், உன்னை பிரிய மாட்டேன்) - என்று  உறுதிமொழி எடுத்து கொண்ட  பின்னரே திருமணம்நடக்கும். இன்றைய காலகட்டத்தில் உப்பு பெறாத விஷயங்களுக்கு எல்லாம் தம்பதிகள் சண்டையிட்டு பிரிவதும், விவாகரத்து கோரி நீதிமன்ற படிக்கட்டு ஏறுவதும் சர்வ சாதாரணமாகி விட்டது. ஆனால் ஏன்ஜலா - கிறிஸ்டியன் என்ற காதல் ஜோடி மேலே சொல்லப்பட்ட திருமண உறுதிமொழி வாசகத்தை தங்கள் வாழ்க்கையில் உண்மையாக்கி வாழ்ந்து காட்டியுள்ளனர்.


 ஏன்ஜலா கிறிஸ்டியனை முதல் முறை சந்தித்த போதே இவர் மீது காதல் மலர்ந்திருக்கிறது. ஏன்ஜலாவின் காதலன் கிறிஸ்டியன் நீங்கள் நினைப்பது போல்  சாதாரணமான  நபர் அல்ல, முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு உடல் பாகங்கள் செயலிழந்த நிலையில்,  எஞ்சி இருக்கும் வாழ்நாளெல்லாம் படுக்கையில் அல்லது வீல் சேரில் காலத்தை கடத்த வேண்டிய நிலையில் இருக்கும் பரிதபத்திற்குரிய நபர். ஆனாலும்  ஏன்ஜலா தான் காதலித்த மனிதரேயே கரம் பிடித்து வாழ்நாளெல்லாம் சேர்ந்து வாழ்வேன் என்ற உறுதியோடு இருந்திருக்கிறார்.

 ஏன்ஜலா கிறிஸ்டியனை பற்றி கூறும் போது " நான் கடவுளிடம் வேண்டியதெல்லாம் என்னை உண்மையாக நேசிக்க கூடிய ஒருவரை எனக்கு துணையாக தர வேண்டும் என்பது தான், அப்படிப்பட்ட ஒருவருக்காக நான் காத்திருந்தேன், சரியான காலம் வரும்போது அவர் என்னை தேடி வந்தார், அவரை விட்டு நான் ஒருபோதும் பிரிய மாட்டேன்" என்று கூறியுள்ளார்.



 கிறிஸ்டியன்  ஏன்ஜலாவை பற்றி கூறும் பொழுது "அவள் என்னை விட்டு எந்த சூழ்நிலையும் பிரியவில்லை, எவ்வளவோ சோதனைகள் வந்த போதும் அவள் என்னை விட்டு பிரிந்து செல்ல விரும்பியதில்லை, எப்போதும் என்னோடு கூட இருந்தாள், ஒரு வேளை அவள் என்னை பிரிந்து செல்ல விரும்பினால் அவளை துரத்தி தொடந்து செல்லும் நிலையில் நானும் என் உடலும் இல்லை. எங்களுக்குள் சிறு மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் வந்த போதும் நான் ஒரு போதும் அவளை பிரிய விரும்பியதில்லை, அவளை பிரிந்து என்னால் வாழ இயலாது" என்று கூறியுள்ளார்.

இந்த காதல் ஜோடியின் திருமணத்தின் போது மணமகன் கிறிஸ்டியன் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருகி கொண்டே இருந்தது. ஏன்ஜலாவும்  கிறிஸ்டியனை அணைத்து, முத்தம் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தினார்.  இந்த ஜோடியின் அன்பும் பாசமும் திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Sunday 11 June 2017

ஐந்து வயதில் தீயிலிருந்து தன்னை காப்பாற்றிய காவல் துறை அதிகாரியை பத்தொன்பது வருடங்கள் கழித்து சந்தித்த பெண்

சிறு வயதில் தன்னை  தீ பற்றியெறிந்த தன் வீட்டிலிருந்து காப்பாற்றிய தீயணைப்பு படை வீரரை மீண்டும் தன் பட்டமளிப்பு விழா நாளில் சந்திக்க விரும்பிய பெண்.



1998 ஆம் ஆண்டு ஜூன் இருபத்தி ஐந்தாம் தேதி   ஜோசிபெல் அபொண்டே,    ஐந்து  வயதில்  நடந்த சம்பவம் இது. கனக்டடிகட் நகரில் இருந்த தன் வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது வீட்டில் திடீரென  தீ பற்றி எரிய தொடங்கியது, அதே வீட்டில் தூங்கி கொண்டிருந்த அவள் மாமாவை தீயிலிருந்து காப்பாற்ற முடியவில்லை, கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பில் இருந்த அபொண்டேவை ஒரு தீயணைப்பு வீரர் தீயிலிருந்து காப்பற்றி, சரியான நேரத்தில் அங்கு வந்த  காவல் துறை அதிகாரி பீட்டர் கெட்சின் கையில் ஒப்படைத்தார் .



பீட்டரின் கையில் அபொண்டே கொடுக்கப்பட்டபோது மூச்சு பேச்சில்லாமல் மயங்கி இருந்தாள், இருதய துடிப்பு நின்று போயிருந்தது. உடனடியாக, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில்  காவல் துறை வாகனத்தின் பின்பகுதியில் வைத்து இதய இயக்க மீட்பு (CPR) அவசர சிகிச்சை கொடுத்தார் பீட்டர், நல்ல வேளையாக அவர் அளித்த அவசர சிகிச்சையினால் அவள் மூச்சு திரும்பியது.



இந்த சம்பவம் நடந்து பத்தொன்பது வருடங்கள் கடந்து விட்ட நிலையில், அபொண்டே தன்னை தீயின் நாக்கிலிருந்து காப்பாற்றிய வீரரை தன் வாழ்நாளின் மிக முக்கியமான நாளில் சந்திக்க விரும்பி இருக்கிறார், ஆம் அபொண்டே இப்போது கல்லூரியில் பட்டபடிப்பு முடித்து பட்டமளிப்பு விழா  நாள் வந்திருந்தது. இந்த வீரர் மட்டும் தன்னை தீயிலிருந்து காப்பாற்றி இருக்கா விட்டால் இன்று தான் படித்து பட்டம் வாங்கி இருக்க முடியாது என்று நன்றி உணர்வோடு நினைவு கூருகிறார்.



சமீபத்தில், அபொண்டே அளித்த பேட்டி ஒன்றில் " நம் வாழ்வில் மறக்க முடியாத முக்கியமான நிகழ்வுகள் எப்போதாவது தான் வரும், அது போன்ற முக்கியமான நிகழ்வில் யாரெல்லாம் என் வாழ்வில் முக்கியமானவர்களாக இருந்தார்களோ அவர்களை இந்த பட்டமளிப்பு விழா நாளில் சந்திக்க விரும்பினேன், என் வாழ்வின் மிக மோசமான சூழ்நிலையில்  அவர்கள் என்னோடு கூட இருந்து எனக்கு உதவியவர்கள்,  கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பில் இருந்த என்னை மீட்டெடுத்து எனக்கு மறு வாழ்வு கொடுத்தவர் பீட்டர் ,  தீயணைப்பு குழுவினர் மற்றும் அந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு உதவிய முகம் தெரியாதவர்கள் எல்லோருக்கும் நன்றி" என்று கூறியிருக்கிறார்.



பீட்டர் கெட்ஸ் கூறுகையில் " இது என் வாழ்வில் இதயத்தை தொட்ட மறக்க முடியாத சம்பவம், அந்த நேரத்தில் நான் சென்ற போது நிலைமை கட்டுக்குள் வந்திருந்தது, தீயணைப்பு வீரர்கள் அவர்கள் கடமையை செய்தனர், நான் என் கடமையை செய்தேன், மருத்துவர்களும் சரியான நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றியதால் இன்று ஒரு அழகான இளம் பெண்ணாக அபொண்டேவை  இந்த பூமியில் பார்க்க முடிகிறது" என்றார்.

எவ்வளவு நன்மைகள் செய்தாலும், செய்த நன்மை மறந்து குறை கூறி தூற்றும் நன்றி மறந்தவர்கள்  வாழும் உலகில் பத்தொன்பது வருடங்கள் கடந்தும் தன் உயிரை  காப்பாற்றிய ஒருவரை நினைவில் வைத்து அன்புடன் தன் பட்டமளிப்பு விழா நாளில் சந்தித்து நன்றியோடு மரியாதை செலுத்திய அன்பு உள்ளத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

வெற்றி வேந்தன் (எ) ஷங்கர். ஜெ

Thursday 8 June 2017

தஞ்சையில் உழவன் சிறு தானிய அங்காடி - பாரம்பரிய உணவகம்

நம் முன்னோர்கள் காலத்தில், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு  எல்லாம் கிடையாது ஒரு இரண்டு, மூன்று  தலைமுறைகளுக்கு முன்பு கேன்சர், சுகர்,  பிரஷர்,......போன்ற வியாதிகள் எல்லாம் எங்கோ கோடியில் ஒருவருக்கு இருந்தது, ஆனால் இன்றைக்கு இந்த வியாதிகள் எல்லாம் பாதிக்காத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த கொடிய வியாதிகள் நாம் அன்றாடம் உண்ணும் உணவு பொருட்கள் (ரசாயன உரம் தெளித்து விளைந்த உணவு தானியங்கள்) மூலமாக நம் உடலுக்குள் சென்று விஷம் விதைத்து நம் மக்களின் ஆயுள் காலத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றன.



இப்போது எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பின்பு மக்களின் பார்வை இயற்கை உணவகங்கள் பக்கம் திரும்பி உள்ளது.



கடந்த மே மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி முதல் தஞ்சை நாஞ்சிகோட்டை சாலையில் உழவன்  சிறு தானிய அங்காடி - பாரம்பரிய உணவகம் என்ற உணவகம் துவங்கப்பட்டு இயங்கி வருகிறது.



நான் கடந்த புதன் கிழமை ஏழாம் தேதி இரவு , அந்த சாலை வழியே சென்ற போது இந்த உணவகம் என் கண்ணில் பட்டது, சரி ஒரு நாள் வழக்கமான உணவை தவிர்த்து இந்த இயற்கை உணவை  சாப்பிட்டு பார்ப்போம் என்று உள்ளே சென்றேன். இயற்கை உணவகம் என்ற பெயருக்கேற்ப உணவகத்தின் உள் அலங்காரம் மரத்தால் செய்யப்பட்ட வித்தியாசமான வடிவத்தில் மேஜை நாற்காலிகள் போடப்பட்டு இருந்தது. உணவே மருந்து, மருந்தே உணவு என்ற வாசகம் பளிச்சென்று தெரிந்தது.



அன்றைய சிறப்பு உணவு பட்டியலை சிறிய போர்டில் எழுதி வைத்திருந்தனர், நான் முள்ளங்கி சூப் ஒன்றை ஆர்டர் செய்தேன் , சிறிது நேரத்தில் சுடச்சுட ஆவி பறக்க முள்ளங்கி சூப் அழகான கோப்பையில் கொடுத்தனர், வழக்கமான சுவைக்காக சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் எதுவும் சேர்க்கவில்லை, தூள் உப்பு பயன்படுத்தவில்லை, உடல் நலனுக்கு கேடு விளைவிக்காத சூப்பை குடித்து முடித்து விட்டு  அடுத்து என்ன இருக்கிறது என்று பார்த்தால் சிறுதானிய கஞ்சி, நவதானிய சுண்டல், சிவப்பரிசி தோசை, பொன்னாங்கண்ணி தோசை, வெஜிடபிள் ஆம்லேட் என்று பட்டியல் நீண்டது.


ஒரு பொன்னாங்கண்ணி தோசை ஆர்டர் கொடுத்த சில நிமிடங்களில் தொட்டு கொள்ள சாம்பார், தேங்காய் சட்டினியுடன் பரிமாறப்பட்டது, பச்சை நிறத்தில் வித்தியாசமான சுவையுடன் தோசை இருந்தது,   அடுத்து ஒரு சிவப்பரிசி தோசை ஆர்டர் செய்தேன், சாப்பிட்டு முடித்து திரும்பினால் உள்ளே சிறுதானியங்களில் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் வகைகள், ரெடிமிக்ஸ் வகைகள் விற்பனைக்கு வைக்கபட்டிருந்தது.



இந்த அங்காடியின்  ஊழியருடன்  பேசிய போது உணவு பொருட்கள் பார்சல் செய்வதற்கு பாலிதீன் பைகள் பயன்படுத்துவதில்லை ( கான்சர் நோய் வருவதற்கு சூடான உணவு பொருட்களை  பாலிதீன் பைகளில் அடைத்து தருவதும் ஒரு காரணமாகும்) , உணவகத்தில் ஃபிரிட்ஜ், குளிரூட்டி (ஏசி) பயன்படுத்துவதில்லை உணவில் வெள்ளை சக்கரை, தூள் உப்பு, மைதா, அஜினோ மோட்டோ, மரபணு மாற்று காய்கறிகள் போன்றவைகள் தவிர்க்கபட்டுள்ளது. உணவு சமைக்க அலுமினிய பாத்திரங்களும் பயன்படுத்துவதில்லை என்று உணவகத்தின் சிறப்புகளை தெரிந்து கொள்ள முடிந்தது.



நாக்கு சுவைக்கு அடிமையானவர்களுக்கு ருசியான விருந்து படைக்க இன்று எண்ணற்ற உணவகங்கள் இருக்கின்றன, ஆனால்  மக்கள் உடல்நலனுக்கு கேடு விளைவிக்காத சத்தான உணவுகளை தரும் உணவகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம், அந்த வகையில் தற்போது தஞ்சையில் திறக்கப்பட்டுள்ள உழவன் சிறு தானிய அங்காடிக்கு  ஒரு முறை சென்று இயற்கை உணவை ருசித்து வாருங்கள்.
எண்ணம், எழுத்து, புகைப் படங்கள்: வெற்றி வேந்தன் (எ) ஷங்கர்.ஜெ