இமாலய வசூல் சாதனை செய்த பாகுபலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த இடங்கள் இப்போது மக்கள் விரும்பி செல்லும் சுற்றுலா தளங்களாக மாறி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த கேரளாவிலுள்ள அத்திரப்பள்ளி அருவிக்கு மக்கள் அதிக அளவில் வர துவங்கியுள்ளனர். அந்த அருவி இப்போது நட்சத்திர அந்தஸ்து பெற்ற அருவியாகி விட்டது.
ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பாகுபலி படத்தின் பல காட்சிகள் செட் போட்டு எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட நூறு ஏக்கர் பரப்பளவில் இந்த திரைப்படத்தின் செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டி ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்போது இந்த பிரமிக்க வைக்கும் செட்டுகள் மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட அறுபது கோடி ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட இந்த செட்டுகளில் கலை நுணுக்கத்தோடு வரையப்பட்ட 1500 க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வளவு பிரம்மாண்டமான செட்களை வடிவமைத்து நம் கண்களுக்கு திரைபடத்தின் மூலம் விருந்தளித்த பெருமை கலை இயக்குனர் சாபு சிரிலையே சேரும்.
திரைப்படத்தில் பார்த்த மகிழ்மதி சாம்ராஜ்யத்தை நேரில் பார்ப்பதற்கு இரண்டு வகை கட்டணங்கள் வசூலிக்கப்பட உள்ளது. சாதாரண கட்டணம் ரூபாய் 1250 - (காலை 9 மணி முதல் காலை 11.30 மணி வரை) என்றும் ப்ரீமியம் கட்டணம் ரூபாய் 2349 (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை) என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பதிவு செய்ய முடியும்.